மாவட்டங்களில் உள்ள கலைஞர்களிடையே, திறமையுள்ள கலைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்கும் வகையில் அந்தந்த மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு மாவட்டக் கலை மன்றங்கள் தொடங்கப்பட்டன.
மாவட்டந்தோறும் கலைஞர்களுக்கு அடையாள அட்டைகள் 2002-2003 ஆம் ஆண்டு முதல் தலைவர், மாவட்டக் கலை மன்றம் / மாவட்ட ஆட்சியர் அவர்களின் கையொப்பத்துடன் வழங்கப்பட்டு வருகின்றன. அரசிடமிருந்து நிதியுதவி பெறுதல், அரசு நடத்தும் கலை நிகழ்ச்சிகளில் முன்னுரிமை பெறுதல் மற்றும் பயணச் சலுகை பெறுதல் ஆகியவற்றிற்கு இவ்வடையாள அட்டைகளை கலைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திறன்படைத்த ஐந்து கலைஞர்களுக்கு அவர்களது அகவைக்கு ஏற்றவாறு கலை விருதுகள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அவர்களை தலைவராகக் கொண்டு 9 உறுப்பினர்களைக் கொண்ட குழவினை அரசு அமைத்துள்ளது. விருதுகள் வழங்குவதற்கான விண்ணப்பத்தினை பெற்றிட மாவட்டக் கலை மன்றத்தின் தலைவர் அவர்களால் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வுக் குழுவால் சிறந்த கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன.
வ. எண் | வயது பிரிவு | விருது | விருதுத் தொகை 2017-2018ஆம் ஆண்டு முதல் |
---|---|---|---|
1 | 18 அகவை மற்றும் அதற்குட்பட்ட அகவைப் பிரிவினர் | கலை இளமணி | ரூ. 4,000/- |
2 | 19 முதல் 35 வரை உள்ள அகவைப் பிரிவினர் | கலை வளர்மணி | ரூ.6,000/- |
3 | 36 முதல் 50 வரை உள்ள அகவைப்பிரிவினர் | கலைச்சுடர்மணி | ரூ. 10,000/- |
4 | 51 முதல் 65 வரை உள்ள அகவைப்பிரிவினர் | கலை நன்மணி | ரூ. 15,000/- |
5 | 66 அகவை மற்றும் அதற்கு மேற்பட்ட அகவைப் பிரிவினர் | கலை முதுமணி | ரூ. 20,000/- |
மொத்தம் | ரூ. 55,000/- |